தமிழகத்தில்,  மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை 4 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கும், திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றை நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுப்பையாவை நியமித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு குழுவை ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும்,இந்த தேர்வு குழு, காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரம் வெளியிட்டு, 4 மாதத்திற்குள் 
காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.