கொசுத் தொல்லை இல்லை இனி... புது டெக்னிக்கை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி...!
கொரோனா பெருந்தொற்று கணிசமாக குறைந்து, மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த சமயத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெரிசல் மிகுந்த சென்னை மாநகரில் கொசுக்கள் தொல்லை என்பது அதிகமாக காணப்படுகிறது. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்களை உண்டாக்கும் கொசுக்களிடம் இருந்து மக்களை காப்பது சென்னை மாநகராட்சிக்கு பெரும் சவலாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று கணிசமாக குறைந்து, மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த சமயத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னரே கொசுத் தொல்லையை ஒழிக்க வேண்டுமென களமிறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. கொசு ஒழிப்பில் புது யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ள சென்னை மாநகராட்சி, பணியாளர்கள் செல்ல முடியாத நீர்நிலைகள், நீர் வழிப்பாதைகள், புதர்களில் மறைந்துள்ள கொசுக்களை அழிக்க ட்ரோன் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாறு, கூவம், பக்கிங் ஹாம் என 140 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்வழிப்பாதைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொசு ஒழிப்பிற்காக 3,600 பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொது இடங்களில் கொசு மருந்து புகை அடித்தும் கொசுக்களை விரட்டி வருகின்றனர்.
அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை கண்காணிக்கவும், பிரிட்ஜில் தேங்கும் தண்ணீரை முறையாக வெளியேற்றவும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் டெங்கு கொசுவால் 140 பேர் பாதிக்கப்பட்டனர். நடப்பு ஆண்டில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளோடு, கொசுவினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்றிலிருந்தும் மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.