ஒருநாள் தான் அவகாசம்.. அரசு, தனியார் பள்ளிகளை எங்ககிட்ட ஒப்படைக்கணும்.. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு
சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், சென்னையில் மட்டும்தான் பாதிப்பு கடுமையாக உயர்ந்துவருகிறது. சென்னையில் சமூக தொற்றாக பரவிவிட்டதால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
சென்னையில் இன்று 138 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98% பேருக்கு அறிகுறியே இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
சென்னையில் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில், தற்போது பணிகள் மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களை, சமூக விலகலை கடைபிடித்து தங்கவைக்க ஏதுவாக சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தவிரவிட்டுள்ளது.
சென்னை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை பள்ளிகள் மட்டுமல்லாது, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளையும் மே 2ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.