அடக்கொடுமையே! சென்னையில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?
இன்று சென்னையில் 664 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலவே தற்போதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் ஒரே நாளில் 1,779 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,73,219 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 80,761 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,87,71,192 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 664 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,43,954 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 1,027 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,50,091 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 10,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,641 ஆக அதிகரித்துள்ளது.