ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 

தமிழகத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங், 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு முழு உதவியும் அளிக்கப்டும் என உறுதி அளித்துள்ளார். இதற்காக முதல் தவணையாக தேசிய ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ.614.35 கோடியை வழங்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் 40.36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்னும் 86.53 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன. இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024ம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழகம் 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழகம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழக அரசை தேசிய ஜல்ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வருக்கு, ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

2020-21ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய ரூ.921.99 கோடியில், தமிழகம் ரூ.544.51 கோடியை மட்டும் பயன்படுத்தியது. ரூ.377.48 கோடியை திருப்பி அளித்தது. இந்தாண்டு 4 மடங்கு அதிகமாக ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி உள்ளது. 2020-21ம் ஆண்டில் மாநிலத்தின் பங்களிப்பு பற்றாக்குறையாக ரூ. 290.79 கோடி உள்ளது. 2021-22ம் ஆண்டில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு ரூ.8,428.17 கோடி உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கு பணப் பற்றாக்குறை எதுவும் இல்லை. தமிழக முதல்வருக்கு, மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழகத்தால் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.