கொரோனா நோயாளிக்காக ஆக்சிஜனுடன் பேருந்து சேவை... அசத்தும் சென்னை மாநகராட்சி..!
கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை திட்டம் நேற்று முதல் சென்னை அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டது.
கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை திட்டம் நேற்று முதல் சென்னை அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று உயிரிழந்தவர்களில் 58 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை புகார் வந்து கொண்டிருக்கிறது. தொற்று அதிகரித்துவரும் சூழலில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அரசு மருத்துவமனையில் பிரத்யேகமாக ஆக்சிஜன் வசதியை ஏற்பாடு செய்துள்ளது. தனியார் பள்ளி வாகனங்கள் தற்காலிக ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றப்பட்டு, அதில் ஒரே நேரத்தில் 6 முதல் 7 பேருக்கு ஆக்சிஜன் கொடுக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கிறபோது, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி இருந்தால், அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் இந்த வாகனத்தில் வைத்து ஆக்சிஜன் கொடுக்கப்படும். பின்பு மருத்துவமனையில் உள்ள படுக்கைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள்.
இந்த சேவையின் முதற்கட்டமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் 20 முதல் 25 ஆக்சிஜன் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.