மெட்ரோ ரயில் பாலத்தில் வெடிகுண்டு பீதி.. - ஐதராபாத்தில் பரபரப்பு
ஐதராபாத் மெட்ரோ ரயில் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதால் பயணிகள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத் மெட்ரோ ரயில் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதால் பயணிகள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்வதால் மெட்ரோ ரயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று காலை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அமீர்பேட்டையில் உள்ள மெட்ரோ ரயில் பாலத்தில் உள்ள தூண் அருகே ஒரு பெயின்ட் டப்பா இருந்தது. இதைப்பார்த்த பயணிகள், அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இத்தகவல் பயணிகளிடையே வேகமாக பரவியதால் பீதியில் அலறியடித்தபடி அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து சிலர் அமீர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். பலத்த பாதுகாப்புடன் அந்த டப்பாவை சோதனையிட்டபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. இதன்பின்னரே போலீசாரும், பொதுமக்களும் நிம்மதியடைந்தனர். வெடிகுண்டு தகவல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.