தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதல்.. தூக்கி வீசப்பட்ட கணவன்,மனைவி.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!
சென்னையில் தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் பாலாஜி (53). சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உஷா (48). இவர்கள் நேற்று மதியம் பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஐசிஎப் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது. இதில், கணவன், மனைவி இருவரும் மேம்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில், படுகாயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த பாலாஜி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, உஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் தடுப்பு சுவர் இரண்டு அடி மட்டுமே இருப்பதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.