தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா.. 20 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. 765 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 874 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 20,246ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. கடந்த இரண்டு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை கொஞ்சம் கூட குறையவில்லை. தினமும் 700க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில், இன்றுடன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 800க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
நேற்று 827 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று அதிகபட்சமாக 874 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவரும் நிலையில், இன்று 874 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 20,246ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் கொரோனா உறுதியான 874 பேரில் 141 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். தமிழ்நாட்டிற்குள் இருந்தவர்களில் 733 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 4 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர்.
இன்று ஒரேநாளில் 765 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,246 பேரில் 11,313 பேர் குணமடைந்துள்ளனர். எனவே 8726 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று 9 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.