தமிழ்நாட்டில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா.. 363 பேர் டிஸ்சார்ஜ்.. இறப்பில் சதம்..!
தமிழ்நாட்டில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை 15512ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது. இன்றுடன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 700க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தினமும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. இன்று 12,155 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 759 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 625 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9989ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் அதிகபட்சமாக 3,97,340 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இன்று ஒரே நாளில் 363 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 7491 பேர் குணமடைந்துள்ளனர். 7915 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று 5 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 103ஆக அதிகரித்துள்ளது.