தமிழ்நாட்டில் இன்று புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 135 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இன்றும் 500ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுள்ளவர்களை முழுமையாக கண்டுபிடிக்கும் வகையில், தினமும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
தினமும் சராசரியாக 13 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது.
இன்று 12,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 669 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து, தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் 7000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
இன்று கொரோனா உறுதியான 669 பேரில் 509 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 3839ஆக அதிகரித்துள்ளது. நேற்று 219 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று 135 பேர் குணமடைந்ததால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1959ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.