தமிழ்நாட்டில் இன்று 64 பேருக்கு கொரோனா.. 60 பேர் டிஸ்சார்ஜ்.. இந்தியாவிலேயே அதிக பேரை குணப்படுத்திய தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1885ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வந்தாலும், அதைவிட அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. இன்றும் அப்படித்தான்.. கிட்டத்தட்ட பாதிப்பு உறுதியானவர்களுக்கு நிகரான நபர்கள் குணமடைந்திருக்கின்றனர்.
நேற்று வரை தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1821ஆக இருந்தது. தினமும் சராசரியாக 6500 டெஸ்ட் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று 6621 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் 64 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 1885ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 960 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்று ஒரே நாளில் 60 பேர் குணமடைந்தனர். எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோரை குணப்படுத்திய பெருமைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பை கொண்டுள்ள மகாராஷ்டிராவில் கூட தமிழ்நாடு அளவிற்கு அதிகமானோரை குணப்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்குள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். 24 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 1.27% ஆக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி 838 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகம். 29,056 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 26 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.