தமிழ்நாட்டில் பெரும் சோகம்: இன்று ஒரேநாளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு இரண்டுமே உச்சபட்சம்..!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகபட்சமான பாதிப்பும் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்றும் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 4807 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் வந்த நிலையில், இன்றும் பாதிப்பு கட்டுக்குள்ளேயே உள்ளது. இன்று 1219 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 84598ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஒருபுறம் அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று 3049 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,856ஆக அதிகரித்துள்ளது. 49452 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 88 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 2403ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 6 பேர். இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டுமே உச்சபட்சம்.