இன்று பரிசோதனை, பாதிப்பு இரண்டுமே உச்சம்! தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. 1342 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 18,231 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாலில் 1479 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1342 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,047ஆக அதிகரித்துள்ளது. 18,281 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இன்று 18 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.