அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம் கிராமத்திற்கு உட்பட்ட வனசரகத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த‌ காசிநாதன் என்பவரது தம்பி சகாதேவன் உள்ளிட்ட மூன்று பேர் ஆயிரம் ஏக்கர் முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு காசிநாதன் தான் காரணம் என நினைத்த கிராம முக்கியஸ்தர்களுக்கும், காசிநாதனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆமணக்கந்தோன்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது காசிநாதன் வீட்டிற்கு முன்னாள் சாமி நின்ற போது அவரின் குடும்பத்தாருக்கு தீபாரதனை காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து காசிநாதன் கேட்ட நிலையில் இருதரப்பிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

முதல்வர் ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் அடுத்த பிரதமர்; திண்டுக்கல் ஐ லியோனி பேச்சு

வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த இரு தரப்பையும் சேர்ந்த காசிநாதன் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இது குறித்து காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் கமலக்கண்ணன், கண்ணதாசன், தேவேந்திரன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் மீதும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் காசிநாதன் ஜெயசீலன் சகாதேவன் சரசு விஜயா ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பையும் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். 

இதில் காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் 4 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.