உலக சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது 3-ஆவது ஆட்டத்தில் ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.
துபையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இரு ஆட்டங்களில் ஒரு வெற்றி, தோல்வியை பதிவு செய்திருந்த சிந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது லீக் ஆட்டத்தில் கரோலினா மரினை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய சிந்து, ஆரம்பம் முதலே அபாரமாக ஆடினார். முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
46 நிமிடங்களில் இந்த ஆட்டத்தை முடித்த சிந்து, ரியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரினிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
