உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கே முதலிடம்...
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கப்பட்டியலில் இந்தியாவே முதலிடம் பெற்று அசத்தியுள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நிறைவடைந்த இந்தப் போட்டியில் 4 தங்கம், ஒரு வெற்றி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுச் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது இது முதல் முறையாகும்.
இந்தப் போட்டியில் ஷாஸார் ரிஸ்வி, அகில் ஷியோரன், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகிய வீரர்களும், மானு பேக்கர் என்ற வீராங்கனையும் தங்கம் வென்றனர்.
வெள்ளியை அஞ்சும் முட்கில் என்ற வீராங்கனை கைப்பற்ற, ஜிது ராய், ரவி குமார் உள்ளிட்ட 3 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இதனிடையே, கடைசி நாளில் நடைபெற்ற ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லவில்லை. தகுதிச்சுற்றில் ஸ்மித் சிங் 116 புள்ளிகளுடன் 15-வது இடமும், அங்கத் பாஜ்வா 115 புள்ளிகளுடன் 18-வது இடமும், ஷீராஸ் ஷேக் 112 புள்ளிகளுடன் 30-வது இடமும் பிடித்தனர்.