மகளிர் டி20 கிரிக்கெட்: 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து...
மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிப் பெற்றது.
மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானிக்க, பேட் செய்த ஆஸ்திரேலியாவில் கேப்டன் ரேச்சல் ஹெய்ன்ஸ் மட்டும் அதிகபட்சமாக 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 65 ஓட்டங்கள் எடுத்தார்.
அலிசா ஹீலி 31 ஓட்டங்கள், கார்டனர் 28 ஓட்டங்கள் சேர்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்தன. கேரி, ஜோனசன் தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜென்னி 3, ஸ்கீவர் 2, டேனியல் ஹேசல் 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 150 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்தில் டேனியல் வியாட் 18 ஓட்டங்கள், பிரையோனி ஸ்மித் 1 ஓட்டத்துடன் நடையைக் கட்டினர்.
டேமி பியுமன்ட் 58 ஓட்டங்கள், நடாலி ஸ்கீவர் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.
ஆஸ்திரேலிய தரப்பில் மீகன் ஷட், கிம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
நடாலி ஸ்கீவர் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியிருந்த ஆஸ்திரேலியா தனது 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.