சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த, இந்தியாவின் இரண்டாம் நிலை வீரரான ராம்குமார் ராமநாதனுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 22-வது ஆண்டாக வரும் ஜனவரி 2 முதல் 8 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் ராம்குமாருக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் எம்.ஏ.அழகப்பன் கூறுகையில், "ராம்குமார் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். உலக டென்னிஸில் அவர் உச்சகட்டத்துக்கு செல்வார் என நம்புகிறோம். இதுதவிர இந்திய ரசிகர்களும் ராம்குமாரின் ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். எனவே ராம்குமாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.
இந்த முறை உலகின் முன்னணி வீரர்கள் ஏராளமானோர் சென்னை ஓபனில் பங்கேற்கவிருப்பது மிகச்சிறப்பானதாகும். போட்டியின்போது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களின் ஆட்டத்தை நேரில் பார்ப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு த்ரில் அனுபவமாக அமையும்' என்றார்.
2014-ம் ஆண்டு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக உருவெடுத்த ராம்குமார், அதே ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபனில் இந்தியாவின் அப்போதைய முன்னணி வீரரான சோம்தேவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
நடப்பு தேசிய சாம்பியனான ராம்குமார், டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இந்தியாவின் இரண்டாம் நிலை வீரராக உள்ளார்.
