virat kohli willing to grow his child

என் புகழின் வெளிச்சம் படாமல் சாதாரணமாகவும் எளிமையாகவும் குழந்தைகளை வளர்க்க விரும்புவதாக இந்திய அணி கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் இந்திய கேப்டன் கோலி. மிகவும் ஆக்ரோஷமானவர். அவரது கேப்டன்சி குறித்தும் அணியில் அவரது ஆதிக்கம் குறித்தும் அவ்வப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவை எதுவும் கோலியின் ஆட்டத்தையோ செயல்பாடுகளையோ பாதிக்கவில்லை. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பெங்களூரு அணி, கோலியின் கேப்டன்சியில் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் இந்த முறையும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கோலி, மனம் திறந்து பேசினார். அப்போது, என் புகழின் நிழலில் எனது குழந்தைகளை வளர்க்க விரும்பவில்லை. பிரபலத்தின் குழந்தையாக இல்லாமல் சாதாரணமாகவும் எளிமையாகவும் மற்ற குழந்தைகளை போலவே வளர்க்கவே விரும்புகிறேன்.

இந்த புகழெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்துவிடும். எனக்கு குடும்பம் இருக்கிறது. கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது. எனக்கு குழந்தைகள் பிறக்கும். அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டிவரும். இவையெல்லாம் எனது மனதில் தெளிவாக இருக்கின்றன. எனது கிரிக்கெட் வாழ்வின் எந்தவிதமான வெளிச்சமும் என் குழந்தைகளின் மீது பட விரும்பவில்லை. என் வீட்டிற்குள்ளும் அது எதிரொலிக்க விரும்பவில்லை என கோலி தெரிவித்துள்ளார்.