vikas gowda will win gold in third time in Asian Athletics Championship
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வட்டு எறிதல் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் விகாஸ் கெளடா பங்கேற்று மூன்றாவது முறையாக தங்கம் வெல்லுவாரா?
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு 2013-ஆம் ஆண்டிலும், கடந்த சீசனிலும் தங்கம் வென்றுள்ள விகாஸ் கெளடா, இந்த முறையும் தங்கத்தை கைப்பற்றி ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கௌடா பங்கேற்பது தொடர்பாக சந்தேகம் நிலவி வந்த நிலையில், போட்டியில் அவர் பங்கேற்க தேசிய சம்மேளனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கை:
“போட்டிக்கு முந்தைய தேர்வுக்காக விகாஸ் கெளடா, சித்தாந்த் உள்ளிட்ட வீரர்களை அழைத்திருந்தோம். அவற்றில் தேர்ச்சி அடைந்ததை அடுத்து, 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
விகாஸ் கௌடா உடன், தடை தாண்டும் ஓட்ட வீரர் சித்தாந்த் திங்களயா, நீளம் தாண்டுதல் வீரர்கள் சித்தார்த் மோகன் நாயக், நயனா ஜேம்ஸ், மும்முறை தாண்டுதல் வீரர்கள் கார்த்திக் உன்னிகிருஷ்ணன், ஜாய்லைன் எம்.லோபோ ஆகியோரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது கொசுறு தகவல்.
