Venkatrama Raja will be in charge of AICCF from 2017 - 2020 - AICF...

அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (ஏஐசிஎஃப்) தலைவராக பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு 2017 – 2020 வரை பொறுப்பில் இருப்பார் என்று ஏஐசிஎஃப் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஏஐசிஎஃப் செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், “ஏஐசிஎஃப்-க்கான புதிய நிர்வாகிகள், சென்னையில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்போது தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி ஏஐசிஎஃப் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கட்ராம ராஜா, 2017 - 2020 வரையிலான காலகட்டத்தில் தலைவர் பொறுப்பில் இருப்பார்.

அதேபோல் டெல்லியைச் சேர்ந்த பரத் சிங் செளஹான், கெளரவ செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் வி.ஹரிஹரன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, செயலர் பொறுப்பில் இருந்த பரத் சிங், தேசிய விளையாட்டுச் சம்மேளனங்களில் அதிகாரிகளின் பணிக் காலம் தொடர்பாக அரசு கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து அப்பொறுப்பில் இருந்து விலகி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

இந்த நிலையில், பொருளாளராக கிஷோர் பந்தேகர் (கோவா) தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக டி.வி.சுந்தர் (தமிழ்நாடு), ஏ.பக்தவத்சலம் (புதுச்சேரி), ஏ.நரசிம்ம ரெட்டி (தெலங்கானா), சேகர் சந்திர சாஹு (ஒடிஸா), ஜி.பாஸ்கர் (அந்தமான்), மனோஜ் இத்கெல்வார் (மகாராஷ்டிரம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இணைச் செயலர்களாக ஆர்.ஹனுமந்தா (கர்நாடகம்), கபில் சக்ஸனா (மத்திய பிரதேசம்), அதானு லாஹிரி (பெங்கால்), பி.சிங் (மேகாலயம்), நரேஷ் சர்மா (ஹரியாணா), பாவேஷ் படேல் (குஜராத்) தேர்வு செய்யப்பட்டனர்” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.