ஜூனியர் உலகக்கோப்பை.. வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபாரம்!! அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், காலிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுத்திக்குள் நுழைந்துள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்திலும் பப்புவா நியூ குய்னா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபாரவெற்றி பெற்ற இந்திய அணி, காலிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 49.2 ஓவர்களுக்கு 265 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷப்மன் கில், 86 ரன்கள் எடுத்தார்.
265 என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, வெறும் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
வரும் 30ம் தேதி நடக்க இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்திய அணியின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணி, உலகக்கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் எதிர்நோக்கி காத்துள்ளனர்.