umesh yadav opinion about bowling performance against punjab

கேப்டன் கோலியும் பயிற்சியாளரும் சொன்னது போலவே ஸ்டம்பை நோக்கி வேகமாக பந்துவீசினேன் என நேற்றைய ஆட்டநாயகன் உமேஷ் யாதவ் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் போட்டி நடந்தது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் அகர்வாலும் களமிறங்கினர். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்த ராகுல், நேற்றும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடிக்க தொடங்கினார்.

ராகுலும் அகர்வாலும் அதிரடியாக ஆடினர். அணியின் ஸ்கோர் 32 ஆக இருக்கும்போது உமேஷ் யாதவ் வீசிய 4வது ஓவரில் அகர்வால், ஆரோன் ஃபின்ச், யுவராஜ் ஆகியோரை வீழ்த்தி மிரட்டினார் உமேஷ். அதன்பிறகும் சிறப்பாக ஆடிய ராகுல் 47 ரன்களில் வெளியேற அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. 

19.2 ஓவருக்கே 155 ரன்களுக்கு பஞ்சாப் அணி ஆல் அவுட்டானது. அதிரடியாக தொடங்கிய பஞ்சாப் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார் உமேஷ்.

இதையடுத்து 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் மற்றும் டிகாக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போக்கையே மாற்றிய உமேஷ் யாதவ், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்ற உமேஷ் பேசுகையில், கேப்டன் கோலியும் பயிற்சியாளரும் எனக்கு சுதந்திரம் வழங்கினர். கொல்கத்தா பிட்ச் வேகமானது. பெங்களூரு பிட்ச் சற்று வேகம் குறைவானது. எனவே வேகமாகவும் ஸ்டம்பை நோக்கியும் பந்துவீசுமாறு ஆலோசனை கூறினர். அதன்படியே வீசினேன். யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என உமேஷ் தெரிவித்தார்.