ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் உமேஷ் யாதவ், முகமது சமி இந்தியாவுக்காக களம் காணுகின்றனர்…
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால் களம் காண தயாராக இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் விளையாட உள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தொடரில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அணியில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் அஸ்வின் இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ளார். வோர்செஸ்டர்ஷைர் அணியில் விளையாடும் அஸ்வினுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது.
இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியது:
"சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கொள்கையின் அடிப்படையில், அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய யுவேந்திர சாஹல், அக்ஸர் படேல் ஆகியோர் தங்களது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்திய அணி விபரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்க்ய ரஹானே, தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி.