யு-17 உலகக் கோப்பை: அரையிறுதியில் பிரேசில் – இங்கிலாந்து அணிகள் மோதல்…
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் பிரேசில் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
பிரேசில் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம் முதலில் குவாஹாட்டியில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், அங்கு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தின்போது பெய்யும் மழையில் வீரர்கள் விளையாடியதால் ஆடுகளம் மோசமடைந்தது. இதனால், அரையிறுதி ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் சால்ட்லேக் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
அரையிறுதியில் மோதும் இந்த இரு அணிகளைப் பொருத்த வரையில் பிரேசில் அணி, தனது காலிறுதியில் ஜெர்மனியை அதிரடியாக வீழ்த்தி முன்னேறியுள்ளது.
அந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பின்பாதியில் மீண்ட பிரேசில் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது என்பது திரில்லான ஒன்று.
இங்கிலாந்து அணியும் சளைத்தது அல்ல. அவ்வணி தனது காலிறுதியில் அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் திணறடித்து தற்போது அரையிறுதிக்கு வந்துள்ளது.
எனவே, பிரேசில் - இங்கிலாந்து அணிகளிடையே நடைபெறவுள்ள ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை.