This time we will return with medal - Indian player confirmed ...
தாமஸ் கோப்பையில் இந்திய அணி நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெறுவது மட்டுமில்லாமல் பதக்கத்துடன் திரும்புவதற்கான திறனை கொண்டுள்ளது என்று இந்திய வீரர் சாய் பிரணீத் தெரிவித்துள்ளார்.
தாமஸ் கோப்பை போட்டிகள் பாங்காக் நகரில் நாளை தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் இளம் வீரர்களைக் கொண்ட அணி பங்கேற்கிறது.
கடந்த மூன்று முறை நடந்த போட்டிகளில் இந்தியா நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. கடந்த 2010-ல் மலேசியாவில் நடந்த போட்டியில் காலிறுதி வரை இந்தியா முன்னேறியது.
இந்த நிலையில் நட்சத்திர வீரர் சாய் பிரணீத், "இந்திய அணி தாமஸ் கோப்பையில் நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெறுவது மட்டுமில்லாமல் பதக்கத்துடன் திரும்புவதற்கான திறனை கொண்டதாக உள்ளது.
ஸ்ரீகாந்த், சத்விக் - சிராக் ஆகியோருடன் முழுமையான இந்திய அணி சென்றிருந்தால் நாம் நிச்சயம் கோப்பையை வென்றிருக்கலாம்.
தற்போது பலம் வாய்ந்த அணிகளோடு மோத உள்ளோம். குரூப் ஏ பிரிவில் ஆஸி, சீனா, பிரான்ஸ் ஆகியோருடன் இந்தியா இடம் பெற்றுள்ளது. பிரான்ஸை வென்றால் காலிறுதிக்கு முன்னேறலாம். தற்போதைய குலுக்கலில் எதிரணி எளிதாக அமைந்துள்ளது.
பிரணாய், சமீர் வர்மா, லக்ஷியா சென், ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், மனு அட்ரி - சுமித் ரெட்டி, அர்ஜுன் - ராமச்சந்திரன் இரட்டையர் பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.
ஆஸ்திரேலியா ஓபன் போட்டியிலும் இந்திய இரட்டையர் காலிறுதிக்கு முன்னேறினர். எனவே இங்கும் கடுமையாக போராடினால் அடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெறலாம்.
இப்போட்டிக்கு பின் ஒரு மாதம் கழித்து இந்தோனேசியா, மலேசியாவில் போட்டிகள் உள்ளன. பின்னர் உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளன.
அனைத்து வீரர்களுக்கும் நல்ல ஓய்வு தேவை. 11 பாயிண்டுகள் முறைக்கு அனைத்து வீரர்களும் தயாராகி வருகின்றனர்" என்று அவர் கூறினார்.
