கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது - கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு தடை...!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான போட்டியை காண வரும் ரசிகர்கள் கருப்பு சட்டை அணிந்து வர திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில், இன்று காலை விளையாட்டின் தொடக்கத்தின்போது ரசிகர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
அப்போது, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்து வந்த ரசிகர்களை போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.
மேலும் மைதானத்திற்குள் பேனா, பேனர் போன்ற பொருட்களும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு ஸ்டேடியத்துக்குள் போராட்டம் நடத்தலாம் என்பது போன்ற ஸ்டிக்கர்கள் ஃபேஸ்புக்கில் வலம் வந்தது. இதனால் அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.