நடத்திய போட்டிக்கும், நடந்து கொண்டிருக்கும் போட்டிக்கும் நிதி வழங்க வேண்டும் – பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகளை நடத்திய மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்கள், போட்டியை நடத்தியதற்குரிய நிதியை தங்களுக்கு வழங்க பிசிசிஐக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அனுகினர்.
அவர்களது மனு மீதான விசாரணை மேற்கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
அதற்கு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகளை நடத்திய மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு, அதற்குரிய நிதியை வழங்குமாறு பிசிசிஐ நிர்வாகக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தர்மசாலாவில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான ரூ.2.5 கோடி நிதியையும் இமாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு அளிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டது.