திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநில கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் வென்றது.

கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய மாநில கால்பந்து போட்டியில் திருச்சி, கோவை, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 11 கல்லூரிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தூய வளனார் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன.

புதன்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன. இதையடுத்து சடன்டெத் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜமால் முகமது கல்லூரி 5-4 என்ற கோல் கணக்கில் தூய வளனார் கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தூய வளனார் கல்லூரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் எஸ். அருள்தாஸ் கலந்து கொண்டு ஜமால் முகமது கல்லூரி அணிக்கு கோப்பையை வழங்கினார்.