இன்று தொடங்குகிறது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள் இன்று வியாழக்கிழமை (டிச.1) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளன.
ஆண்டுதோறும் டிசம்பர் 3 -ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டிசம்பர் 1 -ஆம் தேதி மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க உள்ளன.
டிசம்பர் 3 -ஆம் தேதி மறுவாழ்வு திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விழாவை, சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா, கிண்டி அண்ணா பல்கலைக் கழக மைதானத்தில் வியாழக்கிழமை (டிச.1) தொடக்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், விருதுகள் உள்ளிட்டவை (டிசம்பர் 3) வழங்க உள்ளார்.
இதில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலர் முகமது நசிமுத்தீன், மாநில ஆணையர் முருகைய்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் தெரிவித்துள்ளது.