srilanka bangladesh players clash

இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான நேற்றைய டி20 போட்டியின்போது நடுவரிடமும், இலங்கை கேப்டனுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், நுருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஐசிசி விதிப்படி, களத்தில் இல்லாத வீரராக இருந்தாலும் ஒழுக்கக் குறைவாக நடந்தால், மைனஸ் புள்ளி அளிக்கும் முறை உள்ளது. அந்தவகையில், நேற்றைய போட்டியின்போது களத்தில் இல்லாமல் இருந்தாலும், முழு போட்டியையும் ஆடாமல் வருமாறு தனது அணி வீரர்களுக்கு அழைப்பு விடுத்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு 1மைனஸ் புள்ளி வழங்கப்பட்டது.

இலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில், நேற்று வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் இரண்டாவதாக வங்கதேச அணி பேட்டிங் செய்தது.

அப்போது கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. கடைசி ஓவரில் முதல் இரு பந்துகள் தோளுக்கு மேல் சென்றும் நடுவர் நோ-பால் தரவில்லை. இதையடுத்து, அப்போது களத்தில் இருந்த, மஹ்மத்துல்லா நடுவர்களிடம் வாதிட்டார். இதைப் பார்த்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் போட்டியை முடித்துக்கொண்டுவருமாறு ஆக்ரோஷமாக கூறினார்.

இதற்கிடையே களத்தில் குளிர்பானங்கள் கொண்டு வந்த ரிசர்வ் பிளேயர் நூருல் ஹசன் இலங்கை கேப்டன் திசாரே பெரேராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரும் மோதிக்கொண்டனர். அதன்பின் அங்கிருந்த வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.

இந்த விவகாரம் ஐசிசி நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. இதை விசாரணை செய்த போட்டு நடுவர் நூருல் ஹசன், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஷாகிப் அல் ஹசனுக்கு 1மைனஸ் புள்ளியும் விதித்தார்.