பிக்பாஸ் வீட்டில் ஸ்ரீசாந்தை கண்ணீர் சிந்தி அழுகவிட்டது யார்..?
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்துகொண்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது மனைவி அனுப்பிய வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்துகொண்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது மனைவி அனுப்பிய வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சூதாட்டப் புகார் காரணமாக ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது கிரிக்கெட் வாரியம். ஸ்ரீசாந்த் இருக்கும் இடத்தில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. ஸ்ரீசாந்த் என்றாலே சர்ச்சை எனுமளவிற்கு சர்ச்சைகளில் சிக்கியவர் ஸ்ரீசாந்த். ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது, சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது போன்ற பரபரப்புகளுக்கு சொந்தக்காரர்.
கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஸ்ரீசாந்த், ஜாரீர் கான் நடித்த அக்சர்-2 என்ற பாலிவுட் படத்தில் நடிகராக அறிமுகமானார். நடிப்பு ஒருபுறமிருக்க, பாஜகவில் இணைந்த ஸ்ரீசாந்த், 2016ல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவ்வாறு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டபிறகு சினிமா, அரசியல் என பலதுறைகளில் காலடி பதித்த ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனிலும் கலந்துகொண்டுள்ளார். சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஸ்ரீசாந்தால் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான சோமி கானுடன் சண்டையிட்ட ஸ்ரீசாந்த், அவரை பார்த்து உன்னை வளர்த்த விதம் சரியில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அந்த வார இறுதியில் இதுதொடர்பாக கேள்வி கேட்ட சல்மான் கானுடனும் வாக்குவாதம் செய்தார் ஸ்ரீசாந்த்.
இதுவரை அந்த நிகழ்ச்சியில் இருமுறை, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக கூறி மிரட்டியுள்ளார் ஸ்ரீசாந்த். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்ரீசாந்திற்கு அவரது மனைவி புவனேஷ்வரி அனுப்பிய வீடியோ ஒன்று போட்டு காட்டப்பட்டது. அதை பார்த்த ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுதார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.