Seven members including Ganguly and Amit Shahs son in BCCI Special Committee
பிசிசிஐ மறுசீரமைப்புக்காக லோதா குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய புதிதாக ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளவ்ரவ் கங்குலி உள்பட ஏழு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா தலைமையிலான இந்தக் குழுவில், டி.சி.மேத்தியூ (கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர்), நாபா பட்டாசார்ஜி (மேகாலய கிரிக்கெட் சங்கச் செயலர்), ஜெய் ஷா (குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன்), பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரி, பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களில் பலர், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்கெனவே பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இதில் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.
பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா ஐபிஎல் போட்டிக்கான தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலின்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே;
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பொறுப்பில் இருக்கக் கூடாது;
பிசிசிஐ நிர்வாகிகள் ஒருமுறை பதவி வகித்தபின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது;
இந்திய அணியின் தேர்வுக் குழுவில் மூன்று பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும்” என்பது போன்ற லோதா குழு பரிந்துரைகளை பிசிசிஐ தரப்பு ஏற்க மறுத்து வருகிறது. அதுகுறித்து ஆராய்ந்து, உச்சநீதிமன்ற விசாரணையின்போது பதிலளிப்பதற்காகவே இந்த சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
