கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட சஞ்சு சாம்சன்..!
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் உடற்தகுதி அண்மைக்காலமாக மிகவும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. அதற்காக யோ-யோ டெஸ்ட் நடத்தப்படுகிறது.
யோ-யோ டெஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட புள்ளிகளை பெறாத வீரர்களுக்கு அணியில் ஆட இடம் கிடைக்காது. இந்தியா “ஏ” அணி இங்கிலாந்து சென்று முத்தரப்பு தொடரில் ஆடவுள்ளது. இந்த அணியில் இளம் வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார்.
இந்த போட்டியில் ஆடும் வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க நடத்தப்பட்ட யோ-யோ டெஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட 16.1 புள்ளியை எடுக்க சஞ்சு சாம்சன் தவறிவிட்டார். யோ-யோ டெஸ்டில் தேறாததால், முத்தரப்பு தொடருக்கான இந்தியா “ஏ” அணியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணியில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய சஞ்சு சாம்சன், 15 போட்டிகளில் 441 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏ அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தும் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்து அணியில் இடம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார் சஞ்சு சாம்சன்.