ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து உள்ளிட்டோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சாய்னா தனது முதல் சுற்றில் 12-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் போர்ட்னிப்பை தோற்கடித்தார். இதன்மூலம் சீன ஓபன் முதல் சுற்றில் போர்ட்னிப்பிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார் சாய்னா. அடுத்த சுற்றில் ஜப்பானின் சயாக்கோ சாட்டோவை சந்திக்கிறார் சாய்னா.
மற்றொரு இந்திய வீராங்கனையான சிந்து 21-13, 21-16 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் சுஸாந்தோ யூலியாவை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் சீன தைபேவின்யா சிங்குடன் மோதுகிறார் சிந்து.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் சீனாவின் கியாவ் பின்னை தோற்கடித்தார்.
மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா 22-20, 21-18 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டகுமா உயேடாவை வீழ்த்தினார்.
இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சினிசுகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான சாய் பிரணீத் 18-21, 18-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஜோர்கென்சனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமித் ரெட்டி ஜோடி 15-21, 8-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சோல்கியூ சோய்-சங் ஹியூன் ஜோடியிடம் தோல்வி கண்டது
