இவங்களுக்குலாம் நிறைய வாய்ப்பு கொடுங்க.. யாருக்காக குரல் எழுப்புகிறார் சச்சின்..?
ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய கத்துக்குட்டி அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக நிறைய போட்டிகள் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள், அனுபவம் வாய்ந்த அணிகளையே சில சமயங்களில் மிரட்டி விடுகின்றன. உலக கோப்பைக்கு தகுதி பெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் மிரட்டியது.
ஆஃப்கானிஸ்தான் அணி ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய தரம்வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்டுள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான், முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. வரும் 14ம் தேதி பெங்களூருவில் இந்த போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை ஆஃப்கானிஸ்தான் அணி ஆவலாக எதிர்நோக்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில், இந்தியாவை வீழ்த்த துடிப்பாக இருக்கிறது ஆஃப்கானிஸ்தான்.
ஆனால் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்வதில் கைதேர்ந்த வீரர்களையும் தரமான பவுலர்களையும் கொண்டு, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதை ஆஃப்கானிஸ்தான் அணியும் உணர்ந்திருந்தாலும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் முனைப்பில் அந்த அணி உள்ளது.
அதேபோல, ஸ்காட்லாந்து அணியும் தற்போது ஆட்ட முறையில் தேறியுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 371 ரன்கள் குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 365 ரன்களுக்கே இங்கிலாந்தை சுருட்டி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ஸ்காட்லாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள், அனுபவம் வாய்ந்த அணிகளுக்கு சவால் விடும் அளவிற்கு ஆடுகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய கத்துக்குட்டி அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த அணிகளுடன் அதிகளவில் ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த அணிகளுடன் ஆடும் வாய்ப்பை அதிகமாக அமைத்து கொடுப்பதுதான் கத்துக்குட்டி அணிகளின் திறமையை வெளிக்காட்ட வழிவகுக்கும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.