சொன்னதைச் செய்த ரோபோ சங்கர் !! தங்க மங்கை கோமதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கினார் !!
தான் அறிவித்தபடி ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மங்கை கோமதிக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் ரோபோ சங்கர் நேரில் சென்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தோகாவில் நடைபெற்ற 23வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்
இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல் ஆளாக நடிகர் ரோபோ சங்கர் வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று சென்னை வந்த தங்க மங்கை கோமதியை நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து தான் அறிவித்தபடி கோமதிக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
ஏற்கனவே காஷ்மீரில் நடந்த புல்வமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மற்றும் தூத்துக்குடி ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி தலா ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது