Asianet News TamilAsianet News Tamil

கேப்டன் பதவியிலிருந்து கோலி அதிரடி நீக்கம்!! புதிய கேப்டன் யார்..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவு புதிய கேப்டனாக டிவில்லியர்ஸ் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

rcb franchise removed virat kohli from captaincy
Author
Bangalore, First Published Sep 8, 2018, 9:59 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவு புதிய கேப்டனாக டிவில்லியர்ஸ் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வலுவான அணியாக திகழ்ந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் மூன்று முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

rcb franchise removed virat kohli from captaincy

உலகின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஒருசேர பெங்களூரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த 2013ம் ஆண்டிலிருந்து விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இவரது கேப்டன்சியின் கீழ் 2016ம் ஆண்டு மட்டுமே ஆர்சிபி அணி இறுதி போட்டி வரை சென்றது. ஆனால் அதிலும் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. 

2018 ஐபிஎல்(11வது சீசன்) தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 14 லீக் போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்து வெளியேறியது. 

rcb franchise removed virat kohli from captaincy

இதுவரை அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால், அந்த அணி நிர்வாகம், அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. முதல் அதிரடியாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டேனியல் வெட்டோரியை நீக்கிவிட்டு கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். பவுலிங் பயிற்சியாளராக ஆஷிஸ் நெஹ்ராவே தொடர்கிறார். 

இந்நிலையில், தற்போது அந்த அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ், ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

rcb franchise removed virat kohli from captaincy

விராட் கோலியின் கேப்டன்சி மீதும் அவர் வீரர்களை பயன்படுத்தும் விதம், பவுலர்களை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து ஐபிஎல்லின்போதே அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணம்தான் இருந்தன. அவரும், தனது அணியில் மிகச்சிறந்த வீரர்களை பெற்றிருந்தும் அவர்களை சரியாக கையாளாததால் தோல்விகளை தொடர்ந்து பெற்றுவருகிறார். எனவே அடுத்த சீசனில் கண்டிப்பாக ஐபிஎல் தொடரை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில், விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios