Ravi Shastri is the next chief coach of the Indian cricket team?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே – கோலி இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அனில் கும்ப்ளே பதவியை விட்டு விலகினார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளதாகத் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால நேரம் முடிந்த நிலையில் கால அவகாசத்தை ஜூலை 9-ஆம் தேதி வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
இதில், ரவி சாஸ்திரி விண்ணப்பிக்கும் பட்சத்தில், 2019 உலகக் கோப்பை போட்டி வரையில் இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளர் பொறுப்பில் நீடிப்பதற்கு அவர் உறுதியளிக்க வேண்டும். அத்துடன், அவர் தனக்கான உதவிப் பணியாளர்கள், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்திய அணியின் இயக்குநராக 2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜூன் வரையில் ரவி சாஸ்திரி பொறுப்பு வகித்தார். அவரை அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், கோலி - ரவி சாஸ்திரி இடையே இணக்கமான நிலை இருப்பதன் காரணமாக, பயிற்சியாளர் தேர்வில் ரவி சாஸ்திரிக்கே கோலி முன்னுரிமை அளிப்பார் என்பது கொசுறு தகவல்.
