rashid khan dedicates man of the match award to afghanistan blast victims

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதல் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் தகுதி சுற்று போட்டியில் தோற்ற ஹைதராபாத், எலிமினேட்டர் போட்டியில் வென்ற கொல்கத்தாவுடன் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 174 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி, ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்திய ரஷீத் கான், 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

பேட்டிங்கில் மிரட்டிய ரஷீத் கான், பவுலிங்கிலும் அசத்தினார். 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் கொல்கத்தாவின் நம்பிக்கையாக திகழ்ந்த கிறிஸ் லின், ரசல் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தப்பா, கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரஷீத். நிதிஷ் ராணாவை ரன் அவுட்டாக்கினார். மேலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய, ஷுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவியின் கேட்ச்சுகளையும் அபாரமாக பிடித்து அசத்தினார்.

இவ்வாறு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தாவை ஹைதராபாத் அணி வீழ்த்த முக்கிய காரணமாக ரஷீத் திகழ்ந்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார். அணியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்குகிறார்.

ஆட்டநாயகன் விருதை வென்ற ரஷீத் கான் பேசியபோது, இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்ஸ்மேனாகத்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். அதனால் பேட்டிங் நன்றாக ஆடமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என் திறமை மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் 100% உழைப்பை கொடுத்தேன். பயிற்சியாளர்கள் கூறிய அறிவுரைப்படி எந்தவிதமான பந்துகளாக இருந்தாலும் அடித்து ஆடினேன். இதற்கு நான் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த ஆட்டநாயகன் விருதை, என் நாட்டில் என் சொந்த ஊரின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

தனது சொந்த ஊரில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு விருதை அர்ப்பணிப்பதாக கூறியது கிரிக்கெட் ரசிகர்களை நெகிழவும் உருகவும் வைத்தது.