நானும் கெய்லும் சேர்ந்தோம்னா.. ராகுல் சொல்லும் ரகசியம்
நானும் கிறிஸ் கெய்லும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தோம் என நினைக்கிறேன் என ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசனை வெல்லும் முனைப்பில் அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்கியது. ராகுல், கெய்ல், கருண் நாயர், யுவராஜ் சிங், ஃபின்ச், மில்லர், மாயன்க் அகர்வால், மனோஜ் திவாரி ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் அஸ்வின், முஜீபுர் ரஹ்மான், ஆண்ட்ரூ டை ஆகிய சிறந்த பவுலர்களுடனும் பஞ்சாப் அணி களமிறங்கியது.
இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் பஞ்சாப் அணி, லீக்கிலேயே வெளியேறியது. எனினும் இந்த சீசனில் ராகுலும் கெய்லும் இணைந்து எதிரணிகளை மிரட்டினர். பெரும்பாலான போட்டிகளில் ராகுல்-கெய்ல் தொடக்க ஜோடி சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டர்கள் தான் சொதப்பினர். சீசனின் இரண்டாம் பாதியில் கெய்ல் சரியாக ஆடாதபோதிலும் கூட, ராகுல் அதிரடியாக ஆடி மிரட்டினார்.
14 போட்டிகளில் ஆடி 659 ரன்களை குவித்தார். ராகுல்-கெய்ல் ஜோடி பஞ்சாப் அணிக்கு நல்ல தொடக்க ஜோடியாக அமைந்துள்ளது.
ஐபிஎல் 11வது சீசன் முடிந்துவிட்ட நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல், கெய்ல் குறித்தும் அவருடன் பேட்டிங்கை தொடங்கியது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். கெய்ல் தொடர்பாக பேசிய ராகுல், கெய்ல் மைதானத்துக்கு வெளியே மிகச்சிறந்த நண்பர். அவருடன் இருக்கும்போது நேரம் ஓடுவதே தெரியாது. களத்தில் அவர் அதிரடியாக ஆடத்தொடங்கிவிட்டால், அந்த போட்டியில் வெற்றி உறுதி. இந்த சீசனில் கெய்ல் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளித்தது.
எந்த பந்தையும் வீணடிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு பந்தையும் அடித்து ரன் சேர்க்க வேண்டும் என்ற பசி கொண்டவர் கெய்ல். பெங்களூரு அணியில் இருந்ததிலிருந்தே எனக்கும் கெய்லுக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து வருகிறது. பவர்பிளே ஓவர்களில் எங்கள் இருவரின் பேட்டிங்கும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என நினைக்கிறேன் என ராகுல் தெரிவித்தார்.