Pro Kabaddi Pooneri Baldan won Ariyana

புரோ கபடி லீக் போட்டியின் 84-வது ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணியை 37-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி புணேரி பால்டான் அணி வெற்றி பெற்றது.

புரோ கபடி லீக் போட்டியின் 84-வது ஆட்டம் அரியாணா ஸ்டீலர்ஸ் மற்றும் புணேரி பால்டான் அணிகளுக்கும் இடையே நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்துக்குள்ளாகவே தலா ஒரு ரைடு, டேக்கிள் புள்ளிகள் மூலம் 2-0 என புணே அணி முன்னிலைப் பெற்றது.

அரியாணாவின் ரைடர் வாஸிர் சிங் 2-வது நிமிடத்தில் அணிக்கான முதல் புள்ளியை பெற்றுத் தந்தார்.

இரு அணிகளுமே விடாப்பிடியுடன் ஆட, 5-5 என்ற கணக்கில் புள்ளிகள் சமநிலை ஆனது. பின்னர் 9-வது நிமிடத்தில் ரைடு சென்ற புணே அணியின் ராஜேஷ் மோந்தால், தனது புள்ளிகளால் 7-4 என்ற கணக்கில் அணி முன்னிலை பெற்றது. ஆனால், அடுத்த நிமிடத்திலேயே அரியாணாவும் புள்ளிகளை அடுத்தடுத்து கைப்பற்ற ஆட்டம் மீண்டும் 7-7 என சமன் ஆனது.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் புணே வீரர் தீபக் ஹூடாவின் ரைடு புள்ளியால், 10-9 என முன்னிலை பெற்ற அந்த அணி, அடுத்த நிமிடத்திலேயே அரியாணாவை ஆல் ஔட் செய்தது. இதனால் முதல் பாதியில் புணேரி அணி 10-16 என்ற கணக்கில் முல்லைப் பெற்றது.

2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் இரண்டு புள்ளிகளை வென்றது அரியாணா. எனினும் தொடர்ந்து அபாரமாக ஆடிய புணே ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் 20-13 என முன்னிலை வகித்தது.

பின்னர் அரியாணாவை ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை ஆல் அவுட் செய்தது புணே தொடர்ந்து அரியாணாவின் சுர்ஜித் சிங் 3 ரைடு புள்ளிகளை கைப்பற்றினாலும், கடைசி நேரத்தில் புணே அணி 37-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

புணே அணியில் அதன் ரைடர் ராஜேஷ், பின்கள வீரர் சந்தீப் நர்வால் தலா 7 புள்ளிகள் பெற்றனர்.

அரியாணா தரப்பில் ரைடர் சுர்ஜித் சிங் 10 புள்ளிகளைக் கைப்பற்ற, தடுப்பாட்டக்காரர் குல்தீப் சிங் 5 புள்ளிகள் வென்றார்.

புள்ளிகள் பட்டியலில் 'ஏ' பிரிவில் 49 புள்ளிகளுடன் அரியாணா அணி 2-வது இடத்திலும், 42 புள்ளிகளுடன் புணே அணி 3-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.