சேவாக் - பிரீத்தி ஜிந்தா இடையே மோதல்..! அஸ்வின் காரணமா..? சேவாக்கின் அதிரடி முடிவு
பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுக்கும் அந்த அணியின் ஆலோசகர் சேவாக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை ஒரு ஐபிஎல் தொடரை கூட வெல்லாத மூன்று அணிகளில் பஞ்சாப்பும் ஒன்று. அதனால் இந்த முறை ஐபிஎல் தொடரை வெல்லும் முனைப்பில் பஞ்சாப் அணி ஆடிவருகிறது.
பஞ்சாப் அணிக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, தொழிலதிபர் மோகித் பர்மன் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர். பஞ்சாப் அணியில் வீரராக ஆடிய சேவாக், இந்த முறை அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்தது தொடங்கி, அஸ்வினை கேப்டனாக நியமித்தது, ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் பதினொன்று வீரர்களை தேர்வு செய்வது என பஞ்சாப் அணியை சேவாக் தான் வழிநடத்திவருகிறார்.
இந்நிலையில், சேவாக்குக்கும் இடையே பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் அணியுடனான கடந்த போட்டியில் 159 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கெய்ல் விக்கெட் ஆரம்பத்திலேயே விழுந்தது. இதையடுத்து 3வது வரிசையில் கேப்டன் அஸ்வின் களமிறங்கி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். கருண் நாயர், மனோஜ் திவாரி என யாருமே சரியாக ஆடவில்லை. கடைசி வரை ஒற்றை வீரராக போராடிய ராகுல், 95 ரன்கள் அடித்தார். ஆனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.
இதையடுத்து, அஸ்வினை முன்வரிசையில் களமிறக்கியது தொடர்பாக சேவாக்கிடம் பிரீத்தி ஜிந்தா கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்ற மற்ற சில விஷயங்களிலும் சேவாக்கிடம் பிரீத்தி கேள்வி கேட்க, அது சேவாக்கிற்கு பிடிக்கவில்லை. அதனால், கிரிக்கெட் தொடர்பாக தன்னிடம் பிரீத்தி ஜிந்தா எதுவும் கேட்கக்கூடாது என மற்ற உரிமையாளர்களிடம் சேவாக் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலின் காரணமாக இந்த ஐபிஎல் சீசனுடன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து சேவாக் விடுபட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.