என்னுடைய அர்ஜுனா விருது அனைத்து பெற்றோர்களின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் - ஒய்னம் பெம்பெம் தேவி உறுதி…
இந்தியாவில் சமூகவியல் சார்ந்த தடைகள் பெண்களை கால்பந்து விளையாட அனுமதிப்பதில்லை. என்னுடைய இந்த அர்ஜுனா விருது, அனைத்து பெற்றோர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்திய முன்னாள் கால்பந்து வீராங்கனையான ஒய்னம் பெம்பெம் தேவி.
இந்திய முன்னாள் கால்பந்து வீராங்கனையான ஒய்னம் பெம்பெம் தேவி, அர்ஜூனா விருது பெற்றபிறகு கலந்து கொண்ட நேர்க்காணல் ஒன்றில், “இந்தியாவில் இருக்கும் எந்தவொரு விளையாட்டு வீரருக்குமான உச்சபட்ச அங்கீகாரம் அர்ஜுனா விருது.
எந்தவொரு விளையாட்டு வீரர் / வீராங்கனையுமே அங்கீகாரத்துக்காக விளையாடுவது இல்லை. ஆனால், அது கிடைக்கும்போது திருப்தியளிப்பதாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நான் செய்த தியாகங்கள் வீண் போகவில்லை. இந்தியாவில், தான் சார்ந்த துறைகளில் உள்ள தடைகளை தினந்தோறும் கடந்து முன்னேறி வரும் பெண்களுக்கு எனது அர்ஜுனா விருதை சமர்ப்பணம் செய்கிறேன்
இந்தியாவில் உள்ள சமூகவியல் சார்ந்த தடைகள் சில வேளைகளில் பெண்களை கால்பந்து விளையாட அனுமதிப்பதில்லை. எனக்கான இந்த அர்ஜுனா விருது, அனைத்து பெற்றோர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். மகளிர் கால்பந்து விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் அர்ஜுனா விருது பெறலாம் என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கால்பந்து அணி தங்கம் வென்றதை அடுத்து ஓய்வு முடிவை அறிவித்தேன்.
'உங்களுக்கு மரியாதையான வகையில் பிரிவுபச்சாரம் அளிக்க விரும்புகிறோம்' என்று கூறிய அகில இந்திய கால்பந்து சம்மேளனம், எனது ஓய்வு முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியது.
இந்திய கால்பந்து வரலாற்றில் முன்பு இதுபோல் நடந்துள்ளதா எனத் தெரியவில்லை. எனக்கு அளித்த இந்த கெளரவத்துக்காகவும், தொடர்ச்சியான ஆதரவுக்காகவும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பெம்பெம் தேவி கூறினார்.