எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்…
எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
எம்.சி.சி. மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் 91-வது எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது.
இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய இரயில்வே, பாரத் பெட்ரோலிய கழகம் (பிபிசிஎல்), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி பெங்களூர் அணிகள் இடம்பெற்றுள்ளன.
'பி' பிரிவில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் (ஓ'என்ஜிசி), பஞ்சாப் தேசிய வங்கி, ராணுவ லெவன், ஹாக்கி ஒடிஸா, மத்திய செகரட்டரியேட் ஹாக்கி அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவடையும் இந்தப் போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.5 இலட்சமும், 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.2.5 இலட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
சிறந்த முன்கள வீரர், சிறந்த நடுகள வீரர், சிறந்த பின்கள வீரர், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர், தொடரின் நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் வீரர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் உயர் ரக சைக்கிள் வழங்கப்படவுள்ளது என்பது கொசுறு தகவல்.