ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து, அந்தப் போட்டிக்கான அவரது ஊதியம் முழுவதையும் அபராதமாகச் செலுத்த ஐசிசி உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதில் இருந்து டூபிளெஸ்ஸிஸ் தப்பியுள்ளார்.

இதனால், வியாழக்கிழமை தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

சூயிங்கம் மென்ற உமிழ்நீர் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்திருந்தது. அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஐசிசி போட்டி நடுவர் ஆன்டி பைகிரோஃப்ட், "பந்தின் தன்மையை மாற்றுவதற்காக டூபிளெஸிஸ் அதை சேதப்படுத்தியது விடியோ ஆதாரம் மூலம் நிரூபணமாகியுள்ளது' என்று குறிப்பிட்டார்.

பந்தை சேதப்படுத்தியதாக டூபிளெஸிஸ் மீது குற்றம்சாட்டப்படுவது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அது நிரூபணமானதை அடுத்து அவரது போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.