லிவர்பூல் அணிக்கு தோல்வியை பரிசளித்தது ரியல் மாட்ரிட்... 13-வது முறையாக கோப்பையை வென்று அசத்தல்...
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி 13-வது முறையாக கோப்பையை வென்றது.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் முதல் டிவிஷன் கிளப் அணிகளுக்கு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு நாக் ஔட் அடிப்படையில் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிக்கு சாம்பியன்ஸ் லீக் என பெயரிடப்பட்டுள்ளது.
2017-18-ஆம் ஆண்டுக்கான இறுதி ஆட்டம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியும், இங்கிலாந்தின் லிவர்பூல் அணிகளும் மோதின.
நடப்புச் சாம்பியன் ரியல் மாட்ரிட் 16-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே லிவர்பூல் தாக்குதல் பாணியை கடைபிடித்தது. எனினும் ரியல் அணி மெதுவாக ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
முதல் பாதி கோலின்றி முடிந்த நிலையில் இரண்டாம் பாதியில் 51-வது நிமிடத்தில் ரியலின் கரிம் பென்செமா முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 55-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் சாடியோ மானே கோலடித்தார். 1-1 என்ற சமநிலை ஏற்பட்ட போது, ரியல் அணியின் காரெத் பாலே 64 மற்றும் 83-வது நிமிடங்களில் அடித்த கோல்கள் வெற்றியை உறுதி செய்தது.
அதன்படி, யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வென்று 13-வது முறையாக கோப்பையை வென்றது.