கோலி-சாதனை மேல் சாதனை
இந்தப் போட்டியில் 235 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார் கோலி. இதுதவிர ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன்களின் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் கோலி. முன்னதாக 2013-இல் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மகேந்திர சிங் தோனி 224 ரன்கள் குவித்ததே இந்திய கேப்டன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது.
ஓர் ஆண்டில் 3 இரட்டைச் சதங்களை விளாசிய மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். கிளார்க் (2012), மெக்கல்லம் (2014) ஆகியோர் மேற்கண்ட சாதனையை செய்த மற்ற இரு கேப்டன்கள் ஆவர்.
இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக இரட்டைச் சதத்தை விளாசியுள்ளார். இதன்மூலம் சர்வதேச அளவில் ஓர் ஆண்டில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டைச் சதங்களை விளாசிய 5-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோலி. மைக்கேல் கிளார்க், பிரென்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன் ஆகியோர் மற்ற நால்வர்.
மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் குவித்த பிறகு கோலியின் டெஸ்ட் சராசரி 50.53. ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் கோலியின் சராசரி முறையே 52.93, 57.13 ஆகும். இதன்மூலம் ஒரே நேரத்தில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என 3 விதமான போட்டிகளிலும் 50-க்கும் மேற்பட்ட சராசரியை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோலி.