இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலி 8 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினாலும், தோனி 134 ஓட்டங்கள் எடுத்தார். அதன்படி இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அதே 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்தியாவில் தொடக்க வீரர் ராகுல் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். உடன் வந்த தவன் 11 ஓட்டங்களில் கிளம்பினார்.

அடுத்து வந்த கேப்டன் கோலி 8 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, தொடக்கத்திலேயே திணறியது இந்தியா. அடுத்து ஜோடி சேர்ந்த தோனி - யுவராஜ், விக்கெட் சரிவுக்கு அணைபோட்டு அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 250 ஓட்டங்கள் குவித்தது.
யுவராஜ் 127 பந்துகளில் 21 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 150 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் 122 பந்துகளை சந்தித்த தோனி, 10 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 134 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா. ஹர்திக் பாண்டியா 19, ஜடேஜா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் இயான் மோர்கன் அதிகபட்சமாக 102 ஓட்டங்கள் எடுத்தார். தொடக்க வீரர் ஜேசன் ராய் 82 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் ஆடிய ஜோ ரூட் (54), மொயீன் அலி (55) அணியின் ஸ்கோரை உயர்த்த, வலுப்பெற்றது இங்கிலாந்து. எனினும், மோர்கன் தவிர எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்களில் வீழ்ந்தது இங்கிலாந்து.

பிளங்கெட் 26, வில்லி 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.